Friday, July 12, 2013

52. புத்தரைக் காண ....





 *


பெங்களூரு - கூர்க் பயணத்தடத்தில் இன்னொரு இடம் - குஷால் நகர். திபேத்தியர்களுக்கென்று கொடுக்கப்பட்ட இடமாம். எங்கும் சிகப்பாடை அணிந்த புத்த பிக்குகள். எல்லா வயதிலும் நடமாடிக்கொண்டு  இருந்தார்கள். சின்னப் பையன்களாக பலரும் இருந்தனர்.



அது சரி ... சின்ன வயதிலேயே ‘ஆணி’ அடித்தால் தானே ‘மதம்’ உள்ளே இறங்கும்.  ஒரு சின்ன சந்தேகம். பெண் பிக்குணிகளும் இருப்பார்களோ?
பெண் பிக்குணிகள் ..???
ஏனெனில் பல ஆண்களுக்கு நடுவில் சில பெண்கள் பிக்குணிகள் மாதிரி தோன்றினார்கள். மிக அழகான இளம் வயதுப் பெண்கள் சிலரை அப்படிப் பார்த்தேன்.  அவர்களின் கைகளிலும் -அதற்கு என்ன பெயர் என்று தெரியாது; எனக்குத் தெரிந்த பெயரைச் சொல்கிறேன். - ஜெபமாலை, ஆண்கள் போலவே வைத்திருந்தார்கள். இதென்ன இந்த ஜெபமாலை எல்லா மதத்தினரும் வைத்து உருட்டுகிறார்கள். ஜெபமாலையின் பரிணாமம் படிக்க யாராவது முயற்சிய்ங்களேன்!


 
முன் வாசலில் இடது பக்க படத்தில் இருப்பது போன்ற ஒரு தோரண வாயில். அதில் ஒருவரது படம் பெரியதாக இருந்தது. அவர் யார்? லாமா இல்லை அவர் என்பது மட்டும் தெரிந்தது.









அவர்கள் கோவில். உள்ளே பெரிய டமாரம் ஒன்று இருந்தது. நாங்கள் போகும்போது சின்ன புத்த பிக்குகள் எல்லோரும் பிரார்த்தனை செய்து கொண்டு இருந்தார்கள். அதிலிருந்த சின்னப் பையன்களைப் பார்க்கும் போது எனக்குப் பாவமாக இருந்தது.



பீடங்களில்  பல புத்தர்கள் உட்கார்ந்திருக்கிறார்கள். யார் கெளதம புத்தர், மற்றவர்களெல்லாம் யார் யார் என்று தெரியவில்லை.




*





பல புத்தர்களின் கைகளில் தொலைப்பேசி இருந்தன.

அழகான கட்டிடங்கள். திபேத்திய கலாச்சாரத்தில் கட்டப்பட்டு நன்கு பேணப்பட்டு வருகின்றன.





இக்கட்டிடங்களுக்கு வெளியே நிறைய நிலங்கள் அவர்களுக்காகக் கொடுக்கப்பட்டு நன்கு விவசாயம் நடக்கிறது. எப்படி நடக்கும் என்றேன். வங்கிகள் நன்கு கடன் கொடுப்பதாகக் கூறினார்கள். நிலங்களில் கூலிக்காக வேலை செய்வது நமது மக்கள் தான். அவர்கள் மேற்பார்வை மட்டும் பார்ப்பது போல் தோன்றியது.


*
இடம் பார்த்து முடிந்ததும் பல கேள்விகள்:

*  திபேத்தியர்களுக்கும் சீனாவிற்கும் நடுவே  நிறைய குழப்பங்கள்.  அரசியல் நிலையில் இவர்களுக்கு தங்கும் இடம், நிலம், பண உதவி, வங்கிகளின் உதவி அளிப்பது எதற்காக?

*  இந்த உதவிகள் யாரைத் திருப்தி படுத்த? ஏன்? அரசியல் காரணங்கள் உண்டா?

*  திபேத் இருப்பதோ வடக்கே எங்கேயோ? அவர்களுக்கு கர்னாடகாவில் ஏன் இந்த இடம் கொடுக்கப்பட்டது?

*  பாவம் .. சின்னப் பசங்க. அதாவது இளம் வயது பிக்குகள். பெற்றோரை விட்டு இவ்வளவு தொலைவில் ...

*  இந்த உதவிகளுக்கு சீனாவின் எதிர்வினை ஏதும் உண்டா இல்லையா? (இல்லாமல் இருக்காது என்றே நினைக்கிறேன்.)

இன்னொரு முக்கிய கேள்வி. இங்கு இருக்கும் திபேத்தியர்கள் இந்தியாவின் அகதிகள் தானே? இவர்களுக்குத் தரப்படும் சலுகைகள் கர்நாடக அரசு கொடுப்பதா .. இல்லை மத்திய அரசு கொடுப்பதா?

இவர்களுக்கு இவ்வளவு சலுகைகள் செய்யும் அரசு ஏன் தமிழ்நாட்டில்  இருக்கும் இலங்கை அகதிகளுக்கு இத்தனை உபச்சாரம், உதவி செய்வதில்லை? அவர்களைப் பேணுவதில்லை. தீண்டத்தகாதவர்கள் போல் ஏன் அவர்களை வைத்திருக்கிறோம்?


திபேத்தின் நகல்

Wednesday, July 10, 2013

51. பறவைகளைத் தேடி ...





*







*



  பெங்களூரிலிருந்து கூர்க் செல்லும் வழியில் ரங்கன் திட்டு. இவ்விடம் பற்றி  ஏற்கெனவே கேள்விப்பட்டிருக்கிறேன். பறவைகளின் சரணாலயம் என்று அந்தக் காலத்திலேயே மதுரையிலிருந்து படம் எடுக்க நண்பர்கள் சென்றது பற்றித் தெரியும்.
இப்போது எனக்கும் ஒரு வாய்ப்பு.

ஒரு பெரிய பூந்தோட்டம். அதற்கு எதிர்த்தாற்போல் மரங்கள் அடர்ந்த பகுதி. வரும் பறவைகள் ஆங்காங்கே மரங்களின் மீது அமர்ந்திருந்தன. நடுவில் நீர்த் தேக்கம். இந்தப் பக்கம் வந்தால் நர மனிதர்கள் இருப்பார்களே என்ற அச்சத்தில் பறவைகள் இப்பக்கமே வருவதில்லை. நடுவில் இருந்த நீர்ப்பரப்பில் முதலைகள் உண்டு என்று ஒரு பயங்கரச் செய்தியால் படகுப் போக்குவரத்துப் பக்கம் நாங்கள் போகவேயில்லை.                                                                                    


மீன் .. மீன் .. மீன்
இவ்வளவு தூரத்திலிருந்து அவைகளை எப்படிப் படம் எடுப்பது என்று யோசித்துக் கொண்டிருந்தேன். ஒரு இளைஞர் கூட்டம் படா படா காமிராக்களோடு படையிறங்கியிருந்தார்கள். அனேகமாக எல்லோரும் Canon காமிரா தான். பலரும் 500 mm வைத்திருந்தார்கள். ம் .. ம் .. அவர்கள் காமிரா வழியே கூப்பிட்டால் தூரத்து பறவையும் பக்கத்துப் பறவையாகி விடுமே என்று ஒரு சின்ன ஏக்கப் பெருமூச்சு ...


முயன்று பார்ப்போமே என்று சில படங்கள் எடுத்தேன்.
வந்தவை இவை .......                                     













NO CRASH LANDING ...GOOD PILOTING ...!
நிஜம் .. நீர் ... நிழல்
LOVELY  LANDING ........




பறக்கும் .. பறவை பறக்கும் ....



 






















  *

Monday, July 08, 2013

50. வண்ணத்துப் பூச்சிகளைத் தேடி .....







*


கூட்டம் கூட்டமாக வண்ணத்துப் பூச்சிகள் இருக்கு .. போட்டோ எடுக்கப் போகலாமா என்ற நண்பர்களுடன் பல ஆண்டுகள் கழித்து அழகர்கோவிலுக்குச் சென்றோம்.

நான் மாணவனாக இருந்த காலத்தில் insect collection  என்ற பெயரில் ‘பூச்சி பிடிக்கப்’ போனது நினைவுக்கு வந்தது. அதன் பின் பல ஆண்டுகள் மாணவர்களை அழைத்துப் போனதும், அப்போதெல்லாம் நடந்தவைகளும்  நினைவுக்கு வந்தன.


அப்போதெல்லாம் கீழே ஒரு தெப்பம் இருக்கும். அதிலிருந்து தனியாக ஓடை ஒன்றில் தண்ணீர் மலையிலிருந்து வந்து கொண்டு இருக்கும். அந்தப் பாதை வழியாகவே செல்வோம். இப்போது அந்த ஓடை இருக்கிறது. தண்ணீர் அதிகமில்லை. பாதி வழி காரில் ஏறி அந்த ஓடையில் ஒரு காலத்தில் வண்ணத்துப் பூச்சிகள் நிறைய இருக்கும் இடத்திற்கு முதலில் சென்றோம். ஏற்கெனவே வண்ணத்துப் பூச்சிகள் நிறைய இருக்கும் இடம் என்று ரவி சொன்ன இடம் அதற்கு சிறிது மேலே கருடன் சாமி கோவிலுக்கு எதிரில் இருந்தது.
அனுமார் கோவிலுக்கு வழிகாட்ட ஓர் உடைந்த உருவத்தில் ...
 அதற்கு எதிர்த்தாற்போல் ஆஞ்சநேயர் சாமி கோவில். கோவில் போகும் இடத்தில் வழிகாட்ட ஒரு உடைந்த சிமண்ட் சிலை பரிதாபமாகக் கீழே கிடந்தது. 

நாங்கள் கருடன் சாமி கோவிலுக்குப் போனால் பெரிய ஏமாற்றம் நாலைந்து பூச்சிகள் மட்டுமே கண்ணில் பட்டன. அவைகளை ஓடிப்பிடித்து படம் எடுக்க முயன்றோம். இன்று ஏன் பூச்சிகள் இல்லை என்றதும் அவைகளின் biological clocks  நினைவுக்கு வந்தது. வெயில் ஏற ஏற பூச்சிகள் வரும் என்பது தெரிந்ததும் மலை மேலே தீர்த்தத் தொட்டி வந்தோம்.  நிறைய குரங்காட்டம் பார்த்தோம்.
பயமா இருக்குல்ல ...?!

FEEDING THE BABY
அன்னையின் மடியில் ....
பெரிய்ய்ய்ய சைஸில் பழந்தின்னி வவ்வால்கள் ஒரு பெரிய மரத்தில் தொங்கிக் கிடந்தன. தனி வவ்வாலைப் படம் எடுக்க முடியவில்லை.

மயில் பீலி வைத்து ஆசிர்வாதம் பண்றார் .... ஆனால் யாரும் ‘தட்சணை’ போடலை .. பாவம்!
தீர்த்தத் தொட்டியில் இருந்து குளித்து வருவோருக்கு மயில் பீகை வைத்து ஆசிர்வாதம் பண்ணிக்கொண்டிருந்தார் ஒரு பெரியவர். பாவி மனுசங்க .. யாருக்கும் அவருக்கு காணிக்கை போட மனசில்லை. நான் நினைச்சேன் .. ஆனால் போடலை! பாவமா இருந்திச்சு ..



மொட்டை போட்டாச்சு ...  சந்தனம் எங்கே...!?

வெயில் ஏறியதும் கீழே இறங்க ஆரம்பித்தோம். தீர்த்தத் தொட்டிக்குக் கொஞ்சம் கீழேயே  சாலை ஓரத்திலேயே கூட்டம் கூட்டமாக இரண்டு புள்ளிகளில் நிறைய்ய்ய்ய வண்ணத்துப் பூச்சிகள் வருவதும் .. பறப்பதும் ... என்று வேடிக்கை காட்டின. படம் எடுப்பதை விட அவைகளை வீடியோவில் எடுத்தோம்.

அதன்பின் கருடன் கோவிலுக்கு வந்தால் நல்ல வேட்டை. ... அதன்பின் அனுமார் கோவிலுக்குப் பக்கத்தில் இருந்த ஓடையிலும் நிறைய வண்ணத்துப் பூச்சிகள் - தனியாகவும் ... கூட்டம் கூட்டமாகவும் ....

 கூட்டம் கூட்டமாக இருப்பது mud sipping  - தண்ணீர் குடிக்கவாம். அப்போதெல்லாம் நாம் எவ்வளவு பக்கம் போனாலும், நம் காமிராவை எவ்வளவு பக்கத்தில் கொண்டு போனாலும் சாதுக்கள் மாதிரி நம்மை அவைகள் ஒன்றும் கண்டுகொள்வதில்லை. ஆனால் தனியாக இருக்கும்போது பக்கத்தில் போவதிற்குள் பறந்து விடுகின்றன. Some animal behaviour....
















*
உடைந்த நிழல் ...








பச்சைச் செடிகளுக்கு நடுவில் அப்படி ஒரு சிகப்பு